தவெக தலைமையிலான கூட்டணி உருவானால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தனது அரசியல் நிலைப்பாட்டிற்கென எப்போதும் ஒரு நேர்மை இருக்கிறது. வெறும் பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக அரசியல் முடிவுகளை மாற்றும் பழக்கம் தனக்கு இல்லை என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.பேரம் பேசினேன் பணியவில்லை என்றும், வாய்ப்பு நிறைவேறவில்லை, அதனால் இன்று தவெகவுக்கு ஆதரவு என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரம் காட்ட முடியுமா? வெளிப்படையாக விவாதிக்க முடியுமா? தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பே அதன் காரணங்களையும் நிலைப்பாட்டையும் திமுக தலைமையிடம் வெளிப்படையாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
விசிக, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எந்தவித துரோகமும் செய்யவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும், தவெக கூட்டணியில் இணைந்தால் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆலோசனைகள் வந்தபோதும், அதை ஏற்கவில்லை என திருமாவளவன் தெரிவித்தார். தனிப்பட்ட பதவியை விட கட்சியின் கொள்கைக்கும் அரசியல் முடிவுகளுக்குமே முன்னுரிமை வழங்கியதாகவும், ஆலோசனைகளுக்குப் பிறகே தவெகவுக்கு ஆதரவு அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.திமுக அரசுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆதரவளிப்போம் என்றும், நட்புறவை பாதிக்க விரும்பவில்லை என்றும் முன்பே தெரிவித்திருந்ததாக அவர் நினைவூட்டினார். இதில் எந்தவித துரோகமும் இல்லை.திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று அறிவித்தது திமுக தலைமையே தவிர, தாம் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் திருமாவளவன் கூறினார். அதேபோல், தவெக கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்றும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றார்.
கடந்த ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்றதாகவும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்த அவர் . எதிர்காலத்தில் தவெக கூட்டணி அமைந்தால் அதில் விசிக இடம்பெறும் என்றும், அதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறினார்.திமுக நிர்வாகிகள் விசிக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது அரசியல் மாற்றத்தின் அறிகுறியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீதான தனது மரியாதை எப்போதும் தொடரும் என்றும், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரையும் மதிக்கும் பண்பே தனது நிலைப்பாடு என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
Also Read:13 வயது மூத்தவருடன் காதல் தொடர்பு… மனைவியை அழைத்து சென்று கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!



