கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதன்பின், கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மாநிலத்தில் 234 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் நிலவும் கொரானா நிலைமை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா கடந்த 26ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அறிவுறுத்தலைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்படி முழுமையாக குணமடைந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகள் காய்ச்சல், இருமலுடன் பள்ளி வந்தால் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தின் நலனுக்காக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: தமிழில் எழுதப்படிக்கத் தெரியுமா..? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை இருக்கு.. ரூ.36,800 சம்பளம்..!!