டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, பேருந்தின் முன்பகுதியை பிடித்தபடி ஸ்டண்ட் செய்தது பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியவுடன், டெல்லி போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். பைக் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், அந்த வாகனம் 13 ஆண்டுகளுக்கு முன்பே விற்கப்பட்டதாகவும், பெயர் மாற்றப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த பைக் 15 ஆண்டுகள் பழமையானதாகவும், டெல்லி வாகன விதிமுறைகளின்படி நடப்பு சாலையில் ஓட்ட தகுதி இல்லாதது என்பதும் கண்டறியப்பட்டது.
வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் எந்த அனுதாபமும் இல்லாமல் பைக்கை பார்ட் பார்ட்டாக உடைத்து பழைய இரும்பு கடைக்கே அனுப்பி வைத்தனர். சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு இது ஒரு கனவூட்டும் எச்சரிக்கை என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது பைக் ஓட்டிய இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் நடத்தப்படும் சாலையிலுள்ள ஸ்டண்டுகள், இனிமேல் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்படாது என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
Read more: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6000-ஐ கடந்தது.. 24 மணி நேரத்தில் 6 பேர் பலி..!!