உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் அரசு சார்பில் நடந்த நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். மேலும் “ தஞ்சை மக்களுக்காக திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. தஞ்சை மண்ணில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்டங்கள் சேர்ந்துள்ளது. மக்களாகிய நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை
நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் தெரிந்து கொள்ள முடிகிறது. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். உட்கட்சி, கூட்டணி பிரச்சனைகளையும் மறைப்பதற்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்புகிறார். அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது தொலைக்காட்சி செய்திகளில், செய்தித்தாள்களில் வருகிறது. அப்போதும் செய்திகளை படிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து அரைவேக்காட்டு தனமான அறிக்கைகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
அவருக்காக இல்லை என்றாலும் மக்களுக்காக பதில் சொல்ல வேண்டியது என் கடமை.. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட 4,57,642 மனுக்களுக்கு தீர்வு காண, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறையை உருவாக்கி 100 நாட்களில் தீர்வு காண உத்தரவிட்டேன்.. 100வது நாள் கோட்டையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 32000 பேருக்கு பட்டா, 30000 பேருக்கு ஓய்வூதியம், 10000 பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டது. 544 கோடி மதிப்பீட்டில் 20,000 வளர்ச்சி பணிகள் திட்டமிடப்பட்டது. இதனால் மக்கள் நம்பிக்கை உடன் மனுக்களை கொடுக்க தொடங்கினார்கள்.
எல்லா மனுக்களுக்கும் 30 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிட்டேன். ஒவ்வொரு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதை எல்லாம் செய்திகள் மூலம் ஆவணப்படுத்தி, வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுகிறோம்..
இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியவில்லை.. அந்த பெட்டியோட சாவி தொலைந்துவிட்டதா என்று கேட்கிறார். அவருக்கு நினைப்பு எப்போதும் பெட்டியில் தான் இருக்கிறது. நியூஸ் பேப்பரே படிக்காத எதிர்க்கட்சி தலைவருக்கு தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியை எடுத்துக்காட்டாக சொல்றேன்.. முதல்வரிடம் மனு அளித்த 30வது நிமிடத்தில் ஆக்ஷன்.. என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு..” என்று தெரிவித்தார்.
Read More : ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்.. குடும்பத் தலைவிகளுக்கு குட்நியூஸ் சொன்ன முதலமைச்சர்..