இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனை பலநேரங்களில் அவரே வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தி திணிப்புக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பிரபலங்களில் ஏ.ஆர்.ரகுமானும் ஒருவர். அப்படி ஒரு சம்பவம் தான் அண்மையில் விருது விழாவில் அவர் தன் மனைவியுடன் கலந்துகொண்டபோதும் நடந்தது.
சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிரா பானுவுடன் வந்து கலந்துகொண்டார். இதில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானின் மனைவியையும் மேடைக்கு அழைத்து அவரை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு கூறினர். இதையடுத்து, பேசுவதற்காக சாயிரா பானு மைக்கை எடுத்ததும், இந்தில பேசாதீங்க; தயவுசெஞ்சு தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் என தன் மனைவிக்கு அன்புக்கட்டளை இட்டார் ஏ.ஆர்.ரகுமான்.
இதை அவர் மைக்கில் சொன்னதைக் கேட்டு அங்கு வந்திருந்த இயக்குனர் மணிரத்னம், நடிகை சாய் பல்லவி உள்பட பிரபலங்கள் அனைவரும் சிரித்தனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து பேசத் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாயிரா பானு, தன்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. அதனால் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி ஆங்கிலத்தில் பேசினார். தனது கணவருக்கு விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், அவரின் குரல் தான் தனக்கு மிகவும் பிடித்தது, அவரின் குரல் மீது எனக்கு காதல் உண்டு என்றும் கூறினார்.