காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ – பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி

அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் (டிடி நியூஸ்) லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), தனது இந்தி செய்தி சேனல் டிடி (தூர்தர்ஷன்) சேனலின் லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தூர்தர்ஷன் சேனலின் லோகோவின் நிறம் மாற்றப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் எவ்வாறு இந்த தேர்தல் நடத்தை விதிமீறலை அனுமதித்தது எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக தனது X தளத்தில் “நாடு முழுவதும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தூர்தர்ஷன் லோகோ திடீரென காவி நிறத்துக்கு மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது. மேலும் இந்த நடவடிக்கை, தேசிய பொது ஒளிபரப்பாளரின் பா.ஜ.க சார்பு பற்றி உரக்கப் பேசுகிறது. தேர்தல் நேரத்தில் இத்தகைய காவி சார்பு தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது. தேர்தல் ஆணையம் இதை உடனடியாகத் தடுத்து, தூர்தர்ஷன் லோகோவை மீண்டும் நீல நிறத்துக்கு மாற்றியமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் மாநிலங்களவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடும்போது, “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது X தள பக்கத்தில் டிடி நியூஸ் நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், “எங்களின் மதிப்புகள் அப்படியே இருக்கும்போது, ​​நாங்கள் இப்போது ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராக இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்துக்குத் தயாராகுங்கள். புதிய டிடி செய்திகளின் அனுவத்தைப் பெறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More: SRH vs DC | முதல் 6 ஓவரில் 12 சிக்ஸர்கள்… சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெறித்தனமான ஆட்டம்.!! 2 ஐபிஎல் சாதனைகள்.!!

Baskar

Next Post

Holiday: வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

Sun Apr 21 , 2024
அரியலூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா செய்திக்குறிப்பில்; “அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் 25-ம் தேதி வியாழக்கிழமை அன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்வு நடைபெறும் […]

You May Like