தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை காவலதுறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் அருகே முத்தையாபுரம், திருமாஞ்சி நகரைச் சேர்ந்தவர் இம்மானுவேல் அப்துல்லா. இவர், மொபைல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கன்னித்தாய் (30). இவர்களுக்கு சையத் அலி பாத்திமா மற்றும் கதிஜா பிஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னித்தாயின் சகோதரருடன் இம்மானுவேல் அப்துல்லா மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இதன் காரணமாக அவருடன் வெள்ளப்பட்டியில் உள்ள வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது இம்மானுவேல் அப்துல்லாவுக்கும், கன்னித்தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், கன்னித்தாய் நடத்தையில் சந்தேகப்பட்டு இம்மானுவேல் அப்துல்லா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த இம்மானுவேல் அப்துல்லா, மண்வெட்டியால் மனைவியை சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவானார். இதில், சம்பவ இடத்திலேயே கன்னித்தாய் உயிரிழந்தார். தகவறிந்த முத்தையாபுரம் போலீசார் விரைந்து சென்று கன்னித்தாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து தலைமறைவான இம்மானுவேல் அப்துல்லாவை தேடி வருகின்றனர்.