தமிழகத்தில் வரதட்சிணை அழுத்தங்களால் புதுமணப் பெண்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த பன்னீருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, பெண் வீட்டார் 5 சவரன் நகை வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 4 சவரன்தான் வழங்கப்பட்டதையடுத்து மீதமுள்ள 1 சவரனை வாங்கி வருமாறு புதிய மனைவிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தை தாங்க முடியாமல், புதுமணப் பெண் வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். பொன்னேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பனியன் தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27) கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி கவின்குமாரை திருமணம் செய்துகொண்டார். 300 பவுன் நகையுடன், ரூ.70 லட்சம் மதிப்புடைய வால்வோ காரும் வழங்கப்பட்டது. ஆனால் மேலும் 200 பவுன் நகையை கொடுக்காததால், ரிதன்யாவை அவரது கணவர், மாமனார், மாமியார் மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடல் மற்றும் மனதளவில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட ரிதன்யா, தன்னைத்தானே காருக்குள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த வாய்ஸ் நோட்டில் தனது துன்பங்கள் அனைத்தையும் வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வரதட்சிணைக் கொடுமைகள் அதிகரித்து வருவதும், இதனால் பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
Read more: முட்டை ஓட்டில் இத்தனை நன்மைகள் இருக்கா..? இது தெரிஞ்சா இனி தூக்கி போட மாட்டீங்க..