2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஆகஸ்ட் 7, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடர் கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தவெக ஆட்சியின் 100 நாள சாதனையை பாராட்டி பேசினார்.
இதனைத்தொடர்ந்து, திமுக கொறடா எ.வ.வேலு, கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த தீரமானத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
20 பேர் சேர்ந்து ஒரு மாணவரை அடித்துக் கொன்றுள்ளனர். அமுதன் கொலை சம்பவம் கோஷ்டி போதல் அல்ல. கோவை செட்டிபாளையம் போலீசார் மாணவனை விசாரணைக்கு வரச் சொல்லி, போதை கும்பல் பற்றிய தகவலை மாணவரிடமிருந்து வாங்கியுள்ளனர், மாணவன் கொடுத்த தகவலை குற்றவாளிகளிடம் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர். இதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது; இதைத்தான் அமுதனின் பெற்றோரும் சொல்லியிருக்கிறார்கள். அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கும் தான் இந்த கொலைக்கு காரணம்.
சென்னை திருவொற்றியூரில் அரசு பள்ளி மாணவன் தனுஷ், போதை கும்பலைத் தட்டிக் கேட்டதால் 30 பேர் கொண்ட கும்பல் தனுஷைக் கொலை செய்துள்ளனர். இந்த அரசு போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கியதாகச் சொல்றாங்க, அதற்குப் பல கோடி ரூபாயில் விளம்பரமும் பண்ணிருக்காங்க. ஆனால், களத்தில் நடப்பது வேறு மாதிரியாக இருக்கிறது என்று அவர் பேசினார்.
இதையடுத்து பேசிய, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தொழிலதிபரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் பெயரை குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருடன் இருந்த முதல்வர் குடும்பமும், அமைச்சர்கள் வரை எவ்வளவு தூரம் தொடர்பில் இருந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இதுவரை ஜாபர் மீது தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டதாக எந்த வழக்குகளும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரிகள் வரை அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகளவில் இருந்துள்ளது. அதனை தடுக்க அனைத்து வகையிலும் முதல்வர் விஜய் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்களது தவெக அரசின் கொள்கையும் அதேதான் என்றார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு எழுந்ததுமே அப்போதைய முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கைது செய்து கட்சியை விட்டே தூக்கினார். ஆனால், தவெக ஆட்சியில் ஒரு அமைச்சரே ஐபிஎல் விளையாட்டின் போது பவுடரை நுனுக்கிட்டு, மாத்திரையைதான் நுனுக்கியதாக கதை விட்டார். அவரிடம் காவல்துறை எதாவது விசாரணை நடத்தியதா?. அவர் மீது எதாவது நடவடிக்கை எடுத்தார்களா?. அதுமட்டுமல்லாமல், சமீபகாலமாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைதார்.
உடனே குறுக்கிட்ட சபாநயகர், உரிய ஆதாரங்கள் இல்லாமல் நீங்கள் பேசக்கூடாது என்றார். உடனே, அமைச்சர் நிர்மல்குமாரின் குற்றச்சாட்டுக்கு எதாவது ஆதாரம் கேட்டீர்களா என்று உதயநிதி கேள்வி எழுப்பினார். நாங்கள் உடனடியாக கைது செய்தோம், கட்சியில் இருந்து நீக்கினோம் என்றார்.
உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த அமைச்சர் சரத், மைதானத்தில் நடந்ததற்கான விளக்கத்தை நான் அளித்துவிட்டேன். அதில் முரண்பாடு இருந்தால், அந்த நிகழ்வு நடந்தது திமுக ஆட்சியில் தான். அப்போது மைதானத்தில் போதை பொருளை அவர்கள் அனுமதித்தார்களா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் சரத், விளக்கம் அளித்த பின் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றார்.



