ஏல நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்ணை, சொகுசு கப்பலில் வைத்து பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேன் டோ (27) என்ற இளம்பெண், கடந்த ஆண்டு ஜனவரியில் ஏல நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரின்சஸ் குரூஸ் கப்பலில் பயணம் செய்துள்ளார். அவருடன் ஏல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பயணித்துள்ளனர். அப்போது, கப்பலில் பயணிகளுக்கு மது விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதை இளம்பெண் ஜேன் டோவும் வாங்கிக் குடித்துள்ளார். பிறகு, மதுபோதையில் சுயநினைவை இழந்த ஜேன் டோ, கப்பலில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றுள்ளார். இதனைப் பார்த்த ஏல நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண் ஒருவர், ஜேன் டோவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் ஆணுறையைப் பயன்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும், ஆனால், வன்புணர்வின் போது ஆணுறை கிழிந்து விட்டதாகவும் நியூ யார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிது நாட்களுக்குப் பின் இளம்பெண் ஜேன் டோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான் ஒரு அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜேன் டோவுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைக் கேட்டு அவர் அதிர்ந்துபோனார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சியில் பல மாதங்களாக அவதிப்பட்டு வந்த ஜேன் டோ, கடந்த நவம்பர் மாதத்துக்குப் பிறகே போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.