திமுகவின் உயர்மட்ட பொறுப்புகளில் ஒன்றான பொதுச் செயலாளர் பதவியில் தற்போது துரைமுருகன் உள்ளார். விரைவில் அந்த பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டு டி.ஆர்.பாலு நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் முதல் இரண்டு முக்கிய பொறுப்புகள் என்பது தலைவர் பதவியும் பொதுச் செயலாளர் பதவியும் தான். தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும். இந்த பொறுப்பில் நீண்ட காலமாக இருந்து வந்தவர் கலைஞர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் தான்.
2018ஆம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். 2020ஆம் ஆண்டு பேராசிரியர் மறைவுக்குப் பின்னர் பொதுச் செயலாளர் பதவி சீனியரான துரைமுருகனுக்கு தரப்பட்டது. தற்போது துரைமுருகனுக்கு ஓய்வளித்து விட்டு அந்த இடத்திற்கு டி.ஆர்.பாலுவை கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.
காரணம் என்னவென்றால், பல நேரங்களில் துரைமுருகனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துகிறது. மற்றவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் கட்சி பதவியோ, அமைச்சர் பதவியோ உடனடியாக பிடுங்கப்படும். ஆனால் சீனியர் என்பதால் துரைமுருகன் பதவி மீது கை வைக்கப்படவில்லை.
சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர். இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு கூட தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் பெயர் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர். தொடர்ந்து துரைமுருகன் புறக்கணிக்கப்படும் நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் துரைமுருகன் விடுவிக்கப்படலாம் என பேச்சுகள் எழுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தலைமைப் பொறுப்பில் மாற்றம் கொண்டு வர திமுக தலைமை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலுவை கொண்டு வர முடிவு செய்துள்ளார் எனவும், பொருளாளர் பதவி எ.வ.வேலுவுக்கு கிடைக்கும் எனவும் தகவல்கள் கசிகிறது. இது தொடர்பாக திமுக தலைமையிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை திமுகவுக்குள் அனல் பறக்கும்.
Read more: மாஸ் காட்டிய திருப்பூர் தமிழன்ஸ்!. பிளே ஆப்- சுற்றுக்கு முன்னேற்றம்!. கோவை கிங்ஸ் ஏமாற்றம்!