தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு கோட்-சூட்டில் வந்த விஜய், இன்று சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலும் அதே தோற்றத்தில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். பின்னர் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இல்லத்திற்கு சென்ற விஜய் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசலில் விஜயை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். சந்திப்பின் போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இல்லத்திற்கு சென்றார். வீட்டு வாசலில் கட்டியணைத்து வரவேற்ற துரை வைகோ, மாலை பட்டு சால்வை அணிவித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். தொடர்ந்து வைகோவை சந்தித்த முதலமைச்சர் விஜய் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய விஜயை வீட்டு வாசல் வரை சென்று, வைகோ மற்றும் துரைவைகோ வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.



