ரயில் நிலையங்களில் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்குவதற்குக் கூடுதல் செலவு செய்ய முடியாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகள் பலரும், அங்கு இலவசமாக வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த தண்ணீரின் தரம் குறித்த ஆய்வில் ‘ஈ-கோலி’ பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகளுக்கு வாட்டர் கூலர்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமான சிஏஜி ஆய்வு மேற்கொண்டது. அப்போது, சில குடிநீர் மாதிரிகளில் ‘ஈ-கோலி’ பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் நிலையங்களில் வழங்கப்படும் குடிநீரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத்தின் உயர் அதிகாரிகளுடன் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து நாடு முழுவதும் குடிநீர் விநியோக அமைப்புகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 20 ஆயிரம் இடங்களில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட உள்ளன. தண்ணீர் சேமிக்கப்படும் தொட்டியில் இருந்து பயணிகளின் கைகளுக்கு வரும் வரை அதன் தரத்தை கண்காணிக்கும் வகையில் ‘டேங்க் டு டாப்’ முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குடிநீர் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தரக் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும்.
நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய நீர்த்தேக்கத் தொட்டிகள் இருக்கும் இடங்களில் அவை அகற்றப்பட்டு, புதிய தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக மையங்களில் வழக்கமான தரப் பரிசோதனைகள் நடத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும், குடிநீர் பரிசோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிடவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக 20 ஆயிரம் இடங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், பின்னர் தேவைக்கேற்ப மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. குறிப்பாக, பாட்டில் தண்ணீர் வாங்காமல் ரயில் நிலைய இலவச குடிநீரை நம்பியிருக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது.
Also Read: 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. 20% சம்பளம் முதல் மனைவிக்கு! எங்கு தெரியுமா?



