இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்; இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா..? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும்” என மத்திய அரசு கூறியது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் போதும் “வெளியுறவு கொள்கை” என்று மழுப்பலாக மத்திய அரசு பதிலளித்தது. இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருக்கிறார். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் போது, பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும், அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார். ஆனால், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளோம்.
நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு, இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அதிமுகவும், பாமகவும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா..? இந்த சட்டத்தை எதிர்த்து போராடிய என் மீது, திருமாவளவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்று விட்டார் எடப்பாடி பழனிசாமி என்றார்.