பிரேசிலின் ஆகுவாஸ் லிண்டாஸ் டி கோயாஸ் பகுதியில், முன்னாள் மனைவியை கடத்திச் சென்று 5 நாட்களாகப் பதுங்கு அறையில் சங்கிலியால் பிணைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 டிசம்பரில் திருமண உறவை முறித்துக்கொண்ட 24 வயதான செவிலியர் எமிலியானே தமாரா, தனது இரண்டு குழந்தைகள் குறித்துப் பேசுவதற்காக முன்னாள் கணவரான அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை சந்திக்க சென்றபோது மாயமானார்.
அவரை ரகசிய இடத்திற்குக் கடத்திச் சென்ற சௌசா, கை, கால்கள் மற்றும் கழுத்தைச் சங்கிலிகள் மற்றும் கைவிலங்குகளால் கட்டிலோடு பிணைத்து, முகத்தில் வாயு முகமூடியை மாட்டித் தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், அப்பெண் தப்பித்துவிடாமல் இருக்க அவருக்கு தொடர்ந்து போதை மருந்துகளை செலுத்தியும் சித்திரவதை செய்துள்ளார்.
அப்பகுதியில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவ காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, மூச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எமிலியானேவை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அய்ல்டன் ரோட்ரிக்ஸ் டி சௌசாவை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
Read More : “எனக்கு புருஷனும் வேணும்.. கள்ளக்காதலனும் வேணும்!” போலீசாரையே திணற வைத்த பெண்!



