சேலம் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் போன்ற வீரிய ஒட்டுரக காய்கறிகளின் பரப்பை அதிகரிக்க 125 எக்டர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும் மா அடர்நடவு, கொய்யா அடர் நடவு, அத்தி, திசுவாழை போன்ற பல்வேறு வகையான பழப்பயிர்களின் பரப்பை அதிகரிக்க ரூ.46.56 லட்சம் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மல்லிகை, செண்டுமல்லி போன்ற மலர்களின் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.5.42 லட்சம் மதிப்பிலும் மஞ்சள், இஞ்சி மிளகு, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை போன்ற சுவைதாளிப் பயிர்களின் பரப்பை அதிகரிக்க ரூ.38.76 லட்சம் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பான சூழலில் பயிர் சாகுபடி செய்ய நிழல்வலை கூடாரம், பசுமைக்குடில் அமைக்கவும், பசுமைக்குடிலில் ரோஸ், கார்னேசன், ஜெர்பரா சாகுபடி செய்யவும் நீரை சேமித்து வைக்க நீர்சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தவும் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்கவும் தோட்டக்கலைப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து மகசூலை அதிகரிக்க தேனி வளர்ப்பதை ஊக்குவிக்கவும் அறுவடை செய்யப்பட்ட விளைப்பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல குளிரூட்டும் வாகனம். நடமாடும் காய்கறி விற்பனை வண்டி போன்ற பல்வேறு திட்டக்கூறுகள் சுமார் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.