இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமிக்ரானின் புதிய XBB1.16 மாறுபாடு மக்களின் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்க முடியும் என்றும், வரவிருக்கும் 4 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர், டாக்டர் டிரென் குப்தா இதுகுறித்து பேசிய போது, “குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு XBB1.16 மாறுபாடு முதன்மைக் காரணமாகும். இந்த மாறுபாடு நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பி உடலுக்குள் பரவுகிறது.. இது மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.

ஆனால் அதே நேரம் கொரோனாவை விட அடினோவைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகள் மிகவும் தொந்தரவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அடுத்த 4 வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.. XBB 1.16 மாறுபாடு வைரஸின் முந்தைய விகாரங்களை விட வேகமாக பரவுகிறது. திக வீரியம் மிக்கதாகவும் நம்பப்படுகிறது.. கடந்த சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு உள்ளது, இதற்கு XBB 1.16 எனப்படும் புதிய மாறுபாடு தான் காரணம்.” என்று தெரிவித்தார்..
பிரபல குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர் எஸ் கே நக்ரா இதுகுறித்து பேசிய போது “ தற்போது இந்த XBB1.16 மாறுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.. அவர்களுக்கு, அதிக காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி ஆகிய கொரோனா அறிகுறிகள் காணப்படுகிறது. கண்களில் அரிப்பும் ஒரு சிலருக்கு இருக்கிறது.. பெரும்பாலான குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் இருக்கிறது.. எனினும் கொரோனாவை உறுதிப்படுத்த ஆர்டி பிசிஆர் சோதனை அவசியம். கைக்குழந்தைகள், பருமனான குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படலாம்.. இவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், இணை நோய்கள் பாதிப்பு இருக்கும் குழந்தைகள் பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.. மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவுதல் மற்றும் உட்புற நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதன் மூலம் மட்டுமே நோயை தடுக்க முடியும்..” என்று தெரிவித்தார்..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5675 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 37,093 ஆக உள்ளது, தினசரி நேர்மறை விகிதம் 2.88 சதவீதம் மற்றும் வாராந்திர நேர்மறை விகிதம் 3.81 சதவீதம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.