காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் குலைக்கரை அருகே பென்ஸ் காரில் வந்த இளம் காதல் ஜோடிகள் பேசிக் கொண்டிருந்தபொழுது, திடீரென காதலன் மற்றும் காதலிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், காதலன் ரூ.70 லட்சம் மதிப்பிலான தனது சொந்த பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். குளக்கரை அருகே கார் ஒன்று எரிவதை கண்டதால், அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீ பற்றி எரிந்த காரை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கவின் (28) என்பவரது கார் என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவ கல்லூரியில் பயின்று வந்த கவின், அதே கல்லூரியை சேர்ந்த மாணவி காவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ராஜகுலம் பகுதியில் காதலியுடன், பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணமாக ஆத்திரம் அடைந்த கவின் தனக்கு சொந்தமான சொகுசு கார் (பென்ஸ்) பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கவினிடம் விசாரித்து வருகின்றனர்.