மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே உள்ள பருந்தா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார். இந்த ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர். இந்நிலையில், மே 5ஆம் தேதி அன்று மாலை மருத்துவ சிகிச்சை முடித்து விட்டு நேரமானதால் கிராமத்திற்கு திரும்பாமல் மனோஜ் வீட்டிலேயே சிறுமியும், அவரது தாயாரும் தங்க முடிவு செய்தனர். பின்னர், இரவு வேளையில், மனோஜ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக மந்தாகினி நதிக்கரைக்கு அழைத்துச் சென்று அவரிடம் அத்துமீறியிருக்கிறார். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மனோஜை அறிந்த 5 இளைஞர்கள் அங்கு வந்துள்ளனர். இவர்களின் செயல்களை பார்த்த அவர்கள், இடைமறித்து தாக்கி இருவரையும் படகில் கடத்திச் சென்றனர்.
படகை நதிக்குள் கொண்டு சென்று 5 பேரும், அங்கு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறவே, சித்தரகூட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சிறுமியின் நண்பர் மனோஜ் யாதவ் மற்றும் வினோத் நிஷாத், ராம் கோபால், மோஹித் நிஷாத், பங்கஜ் ஜோஷி, சந்தோஷ் குஷ்வாஹா ஆகிய 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.