மராத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக மன்னார் வளைகுடா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகத் தொடர் கனமழை பதிவாகி வருகிறது.
செப்டம்பர் 18: நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
செப்டம்பர் 19: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 மற்றும் 21 : நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 22: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
செப்டம்பர் 23, 24: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம் :
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை / இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



