ஃபோர்டு நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 3,800 பேரை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளது..
கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. சமீபத்தில் ஜூம், டிஸ்னி, யாஹு ஆகிய நிறுவனங்களும் பணி நீக்க அறிவிப்புகளை வெளியிட்டன..
இந்நிலையில் ஃபோர்டு நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.. அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு அடுத்த 3 ஆண்டுகளில் ஐரோப்பாவில் 3,800 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜெர்மனியில், சுமார் 2,300 பேரையும், இங்கிலாந்தில் 1,300 பேரையும், மீதமுள்ள ஐரோப்பிய நாடுகளில் 200 பேரையும் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.. அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்டின் சாண்டர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ குறைந்த பொறியியல் வேலைகள் தேவைப்படும் குறைந்த உலகளாவிய தளங்களைக் கொண்ட உலகத்திற்கு நாங்கள் நகர்கிறோம்.
அதனால் தான் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.. இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் தலையீடுகளை எதிர்கொண்டு வருகிறோம்.. அதில் வெற்றிபெற எங்கள் அமைப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதற்காகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்க திட்டுமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர்.. கூகுள் தனது 6 சதவீத பணியாளர்களை அல்லது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, இது அனைத்து நிறுவனங்களிலும் மிக உயர்ந்ததாகும். மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை விடுவித்தது, அமேசான் சுமார் 8,000 ஊழியர்களை நீக்கியது. சேல்ஸ்ஃபோர்ஸ் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, டெல் 6,650 பேரையும், IBM சுமார் 3,900 பேரையும், SAP கிட்டத்தட்ட 3,000 பேரையும், ஜூம் சுமார் 1,300 பேரையும், Coinbase சுமார் 950 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.