இஸ்ரோவில் பணியாற்றிய புகழ்பெற்ற முன்னாள் விஞ்ஞானியும், தமிழறிஞருமான நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பங்களித்த இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்வி, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை வளர்க்கும் நோக்கில் அவர் எழுதிய நூல்கள் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
அவரால் எழுக்கப்பட்ட நூல்களில் நான்கு புத்தகங்களுக்கு தமிழக அரசின் “சிறந்த நூலாசிரியர்” விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியலை நெகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் வடிவமைத்த அவரது பணி, இளைஞர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை விதைப்பதில் முக்கிய பங்காற்றியது.
2004 ஆம் ஆண்டு இவர் எழுதிய “செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்” என்னும் நூலில், செவ்வாய் கிரகத்தைக் குறித்த கிரேக்க இதிகாசக் கதைகள் முதல் நவீன விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் வரை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இவரின் “அறிவியல் ஆத்திசூடி” எனும் நூல், தமிழ் குழந்தைகளுக்காக அறிவியலை அழகாக அடுக்கிய ஒரு முக்கிய முயற்சியாகும்.
இவரது மறைவுக்கு தமிழகத்தின் அறிவியல், இலக்கிய வட்டாரங்கள், மாணவர்கள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அறிவியல் மற்றும் தமிழ் இலக்கிய உலகிற்கு இது பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
Read more: குட்நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?