நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி, இன்று கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு உயிர்ப்பலிகளை ஏற்படுத்திய ‘Gen Z’ போராட்டங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..
புதிய பிரதமராக பாலெந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தபூர் மாவட்டத்தின் குண்டு (Gundu) பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்திலிருந்து, நேபாளக் காவல்துறையினரால் ஒலி காவலில் எடுக்கப்பட்டார். ஒலி கைது செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரது முன்னாள் உள்துறை அமைச்சரான ரமேஷ் லேக்கக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘Gen Z’ போராட்டங்களை ஒடுக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக எழுந்த, மனித உயிரிழப்புக்குக் காரணமான குற்றம் (culpable homicide) சார்ந்த ஒரு வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. காத்மாண்டு பள்ளத்தாக்கு காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஓம் அதிகாரி இது குறித்துப் பேசிய போது, இவ்விருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்திற்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள்
‘Gen Z’ போராட்டங்களின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இவ்விரு தலைவர்களும் அந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணைக் குழுவின் அறிக்கையைச் செயல்படுத்தும் முடிவு, பிரதமர் பாலென் ஷா தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையிலேயே தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணைக் குழுவின் அறிக்கையானது, நேபாளக் காவல்துறை, ஆயுதக் காவல் படை மற்றும் இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த சில அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகளை எழுப்பியிருந்தபோதிலும், பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தற்போதைக்கு எவ்வித நேரடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒலியின் கைது குறித்து நேபாள அரசு கூறியது என்ன?
ஒலி கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே, புதிதாகப் பொறுப்பேற்ற உள்துறை அமைச்சர் சுதன் குருங் இது குறித்துப் பேசிய போது, “கொடுத்த வாக்குறுதி என்பது வாக்குறுதியே; சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
“முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் பதவியிலிருந்து விலகும் நிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரை நாங்கள் காவலில் எடுத்துள்ளோம். இது யாருக்கும் எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; இது நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு தொடக்கம் மட்டுமே. இதன் மூலம் நாடு ஒரு புதிய திசையை நோக்கிப் பயணிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் ‘X’ (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற ‘Gen Z’ போராட்டத்தில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘Gen Z’ போராட்டத்தின்போது, செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குறைந்தது 77 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர். சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு தற்காலிகத் தடையை எதிர்த்துத் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் இன்னல்கள் குறித்து மக்களிடையே நீண்டகாலமாகவே புகைந்துகொண்டிருந்த கடும் சீற்றத்தை வெளிப்படுத்தும் களமாக மாறியது. போராட்டங்களின் முதல் நாளன்று மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கையில் குறைந்தது 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
மறுநாளே நாடாளுமன்றமும் அரசு அலுவலகங்களும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், அப்போராட்டம் நாடு முழுவதும் பரவியது.. இதன் விளைவாக அரசாங்கம் கவிழ்ந்தது.
இதனிடையே, அந்த உயிர்ப்பலி கொண்ட எழுச்சி குறித்து நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கை, அப்போதைய பிரதமரான கே.பி. சர்மா ஒலி மற்றும் பிற அதிகாரிகளைச் சட்டரீதியாகத் தண்டிக்கப் பரிந்துரைத்துள்ளது.
“துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தாலும், “துப்பாக்கிச் சூட்டைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; மேலும், அதிகாரிகளின் கவனக்குறைவான நடவடிக்கையின் காரணமாகச் சிறுவர்கள் கூட தங்கள் உயிரை இழந்தனர்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



