தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்துவருபவர் திரிஷா. காலம் மாறினாலும், ரசிகர்களிடையே அவருக்கான வரவேற்பு மட்டும் குறையாமல் இருப்பது அவரது தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.
40 வயதைக் கடந்த பிறகும் தனது தோற்றம், உடல்தகுதி மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். புதிய தலைமுறை நடிகைகள் அறிமுகமாகியிருந்தாலும், முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக திரிஷாவின் பெயர் தொடர்ந்து இடம் பெறுவது, அவரது மார்க்கெட் மதிப்பும் ரசிகர் ஆதரவும் இன்னும் வலுவாக இருப்பதை உணர்த்துகிறது.
கடந்த ஆண்டு திரிஷா பல முக்கிய திரைப்படங்களில் நடித்திருந்தார். அவற்றில் சில படங்கள் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றாலும், அவரது நடிப்பு மற்றும் திரை ஆளுமை தொடர்ந்து பாராட்டப்பட்டது. குறிப்பாக, அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில், இந்த ஆண்டு வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் உலகளவில் சுமார் ₹300 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அவர் நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமல்லாமல், மேலும் சில புதிய திரைப்படங்களிலும் திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி அவரது திரைப்பயணம் தொடர்ந்து பிஸியாகவே இருந்தாலும், அவரது பெயர் அவ்வப்போது பல்வேறு வதந்திகளிலும் சர்ச்சைகளிலும் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் ஊகங்களுடன் திரிஷாவின் பெயரும் அடிக்கடி இணைக்கப்படுகிறது.
சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சில புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இதுபோன்ற பேச்சுகளை மீண்டும் கிளப்பின. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருவரும் நீண்ட கால நண்பர்கள் மற்றும் தொழில்முறை உறவை மட்டுமே பகிர்ந்து வருகிறார்கள் என்பதே அவர்களது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது அவர் பிரபல ஆடை நிறுவனத்தின் சேவை குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், அந்த நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை திரிஷா பகிர்ந்துள்ளார். ஆம், திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில் பிரபல ஆடை நிறுவனமான Zara-வை குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில், வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதுபோன்ற அனுபவம் தனக்கு இது மூன்றாவது முறை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் ஆடைகளை பேக் செய்வதற்கு முன்பு தரச் சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்றும், இதுபோன்ற அனுபவம் மிகவும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: இந்த டீ குடிங்க.. செரிமானம் முதல் நல்ல தூக்கம் வரை பல நன்மை இருக்கு!



