தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
தமிழகத்தில் இலவச சைக்கிள் திட்டம் கடந்த 2001-2002-ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இது பின்னர் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2025-26 கல்வியாண்டிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச சைக்கிள் திட்டம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மாணவர்களின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விரைந்து வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 2025-26-ம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க அவோன், ஹீரோ சைக்கிள் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாணவிகளுக்கு ரூ.4,250 மதிப்பிலும், மாணவர்களுக்கு ரூ.4,375 மதிப்பிலும் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொள்முதல் ஆணை பெற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சைக்கிள்களை விநியோகிக்க தொடங்க வேண்டும்.
சைக்கிள் வழங்கும் திட்டம் முதல்வரால் தொடங்கிவைத்த பின், அந்தந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். 3 ஆண்டு உத்தரவாத அட்டை வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். சைக்கிள்கள் விநியோகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தது 3 நாட்களுக்கு பழுது நீக்குவதற்கான சிறப்பு முகாம் நிறுவனத்தால் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



