கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளதாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்குப் பார்வையுடன் எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். முதல்வரின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் முன்னேற்றம், திட்டமிடப்பட்ட இலக்கினை அடைவதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை உரிய காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முக்கியப் பணியாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவரது கடும் உழைப்பின் மூலம் சிறப்பான வெற்றிகளைப் படைத்து வருகிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்
கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது. முன்கற்றல் அங்கீகாரம் என்பது, அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை அங்கீகரித்தல் ஆகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல முகாம்களை நடத்தி கட்டுமானத் துறை, தளவாடம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(SME), தோல் மற்றும் நூல் தொழில் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார (RPL) சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
தாம்பரம், சென்னை, கடலூர், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சமூக நல இல்லங்களில் தங்கி இருபவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப திறன்களுடன் சேர்த்து ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு மற்றும் அலுவலக வரவேற்பாளர் ஆகிய பாடநெறிகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 15, 890 இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள்: 5,732 தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், 2,552 முகாம்வாழ் இலங்கை தமிழர்கள், 347 பழங்குடி இளைஞர்கள், 199 மாற்றுத் திறனாளிகள், 1,255 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் இளைஞர்கள், 167 முன்னாள் ராணுவ வீரர்கள், 173 மீனவர்கள், 1,210 கலைஞர்களுக்குக் கலைஞர் கைவினை திட்டத்தின் கீழும், 150 மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு மூன்று சக்கர வாகன ஓட்டுதல் பயிற்சியும், 164 பெண்களுக்கு மோட்டார் வாகன ஓட்டுநர் பயிற்சியும், 270 பேர்களுக்குப் பல்வேறு கைவினை தொழிற்பயிற்சிகளும், 3,671 பேர்களுக்கு குடிநீர் குழாய்களில் திறன் அடிப்படையிலான சிறுபழுது சரிசெய்தல் மற்றும் பராமரிப்புப் பயிற்சியும் என மொத்தம் 15,890 இளைஞர்களுக்குப் பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பில் பயிலும் 2,693 தொழிற்பயிற்சி மாணவர்களுக்குச் செயல்முறை திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுதல் மற்றும் நற்பண்பு மேம்பாடு திறன்பயிற்சி 2,59,072 மாணவர்களுக்கு 2021-22 முதல் வழங்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் நிரல் திருவிழா 1.0ல் (Niral Thiruvizha 1.0) மொத்தம் 8,486 குழுக்கள் பங்கேற்றன. இந்தக் குழுக்களின் சிறந்த 1,000 திட்டங்கள் வளர்ச்சி பெறுவதற்குத் தகுந்த திட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 அணிகளுக்கும்,தங்களுடைய திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ஒவ்வொரு அணிக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டது. இறுதியாக, நிபுணர்கள் மற்றும் முதலீட்டார்களின் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த 50 திட்டங்களுக்கு தலா 1,00,000 (Innovation Voucher Fund) ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் 43 அணிகள் தங்கள் நிறுவனங்களை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளன.
நான் முதல்வன்
மத்திய அரசுப் பணிகளுக்குத் தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை மற்றும் உறைவிடப் பயிற்சித் திட்டங்களின் கீழ் 1,000 குடிமைப் பணித் தேர்வு விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அக்டோபர் 2023 முதல், 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.இதுவரை, 1,288 மாணவர்கள் 2024- ஆம் ஆண்டு குடிமைப் பணிமுதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு இறுதித் தேர்வுக்கான ஊக்கத்தொகையாக தலா ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு பட்டா
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 86,217 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சென்னை மற்றும் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் சிறப்பு பட்டா வழங்கும் திட்டம் – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் / தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு திட்டப் பயனாளிகள், நகர நிலவரித்திட்டம், நில வகைப்பாடு மாற்றம் மற்றும் முந்தைய வரன்முறை திட்டம் ஆகியவற்றின் கீழ் 1,36,149 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 15,015 வரைபட மனை பிரிவுகளுக்கும், 5,496 கட்டட வரைபடங்களுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி, நீண்ட நெடுங்காலமாகக் கிடைக்காத பட்டாக்களைக் குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் வழங்கியும், இணையதளம் வாயிலாகச் சுயச் சான்றிதழ் அடிப்படையில் வீடு கட்டும் அனுமதிகள் பெறுவதிலும் திராவிட மாடல் அரசு மக்களுடன் முதல்வர் என்னும் புரட்சிகரமான திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதில் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SCOOT Pilot Phase Outcomes (2024):
முதல் முன்னெடுப்பாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுள் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களில் 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
அடுத்தகட்டமாக, இத்திட்டத்தின்கீழ், ஜப்பான் நாட்டில் தமிழ்நாட்டைச் சார்ந்த 15 மாணவிகள் தொழில்முறை பயிற்சி மேற்கொண்டதுடன் பணிநியமனமும் பெற்றுள்ளனர் என்பதும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ள தனிச் சிறப்பாகும். SCOOT 2025 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 6 மாணவர்கள் தென் கொரியா நாட்டில் உள்ள புசான் தேசிய பல்கலைக்கழகம் (Pusan National University) மற்றும் காச்சன் பல்கலைக்கழகத்தில் (Gachon University) இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: Happy Birthday MS Dhoni| கேப்டன் கூல், தல தோனிக்கு இன்று பிறந்தநாள்!.