இன்று முதல் களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது. அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் தான் தற்போது வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட ‘எமிஸ்’ என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
தற்போது ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேம்பாட்டு வலைத்தளம், எதிர்கால தேவை கருதி தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் ‘களஞ்சியம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ- எஸ்.ஆர்., ஓய்வூதியத்திற்கு முந்தைய பரிந்துரை, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலவரம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.
பணியில் உள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, பணிசார்ந்த செயல்பாடுகளை அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள் வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.