நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10-ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான வருடாந்திர நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் 210 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 18 முதல் 26-ம் வரை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது முதல் பருவத் தேர்வாகும். பள்ளி தொடங்கி முதல் பருவத்தில் நடத்தப்பட்ட பாடங்கள் அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படும். இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடுக்கப்படும். இதில் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய நாட்கள் இடம்பெறுகின்றன.
மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டாம் பருவத் தேர்வாகும். மாணவர்களுக்கு இறுதி தேர்விற்கு முன்பு முக்கிய தேர்வாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்டு இறுதியில் வருவதால், இதற்கான விடுமுறை நாட்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை நாட்கள் விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பள்ளி வேலை நாட்கள் 220 ஆக இருந்தது. பணிச் சுமை கருதி வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் தற்போது 210 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்கள்…! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…!