ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் தொடர்ந்து 4-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. சென்னையில் கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை மற்றும் கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அரக்கோணம் , திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவருடைய மகனும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும் ஜி ஸ்கொயர் உரிமையாளர்களின் ஒருவருமான கார்த்திக் ஈஸ்வர் மற்றும் நிறுவனத்தின் ஆடிட்டர் சண்முகராஜ் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் அர்ஜுன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனம் காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி குவித்துள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜி ஸ்கொயர் நிறுவனம் பல நிலங்களை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் நிறுவனம் எந்தெந்த பகுதிகளில் பத்திரப்பதிவு செய்துள்ளது என்பது குறித்து முதற்கட்டமாக அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.