முதல்வர் விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். முன்னதாக கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும், அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இத்தகைய பணி நியமனங்களை வழங்க கூடாது எனக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு வழங்கிய பணி நியமனங்கள் செல்லாது என்றும், தேவைப்பட்டால் தற்காலிக அடிப்படையிலான பணிகளை வழங்கலாம் என்றும் அதிரடி தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் சட்ட போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் போர்கள் தீவிரமடைந்தன. இதனிடையே, திரைக்கலைஞர் கூல் சுரேஷ் வெளியிட்ட காணொளி ஒன்றில், “கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவிருந்த அரசு வேலையைத் தடுத்துவிட்டீர்களே சீமான் அண்ணே, இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு கரூருக்குச் சென்று வாக்கு கேட்பீர்கள்?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், கூல் சுரேஷின் விமர்சனத்திற்குத் தனது வழக்கமான பாணியில் பதிலடி கொடுத்தார். கரூரில் தான் எப்படி வாக்கு கேட்பேன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், “நான் கரூருக்கு சென்று எப்படி வாக்கு கேட்பேன் என்று கேட்கிறார்கள். இதற்கு முன்பு மட்டும் என்ன கரூரில் எனக்கு வாக்களித்தா வெற்றிபெற செய்தார்கள்? நீ வாக்களித்தால் என்ன, அளிக்காவிட்டால் என்ன, அதைப் பற்றி எனக்கு என்ன கவலை” என தெரிவித்தார்.
Read More : 100% வரி..! ஆப்பு வைத்த அமெரிக்கா..! விழிபிதுங்கும் இந்தியா, சீனா..!



