பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த மளிகைப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக புகார் எழுந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் மளிகை பொருட்கள் தரம் குறித்து மீண்டும் புகார் எழ வாய்ப்புள்ளதால், ரொக்கமாக வழங்க ஆலோசிக்கப்படுகிறது.