இரட்டை வேடமும் போலித்தன அரசியலும் எதற்கு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இன்று தமிழர்கள்-பிகாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா?
பிகாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் திரு. துரை முருகன் அவர்கள் வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடிய போதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பிகார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா?
தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண். காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பிகாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் ‘பிரதர்’ எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற திமுகவின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர். எனவே, ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்..
முன்னதாக நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, தென்னிந்திய மாநிலங்களில் பீகார் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசினார்.. தமிழ்நாட்டில் திமுக பீகாரிகளை துன்புறுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் “ காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்தி வருகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்..
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும்“ இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி
அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்..” என்பது குறிப்பிடத்தக்கது..



