தமிழகத்தில் நாளை டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தில் நாளை டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 4-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், 5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும், 6-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.