திருச்செந்தூர் குடமுழக்கு விழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருகை தருவார்கள். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.