ஒடிசா கடற்பகுதியில் 72,100 டன் இரும்புத் தாதுவுடன் சென்ற எம்வி ஓஷன் வின்னர் (MV Ocean Winner) என்ற பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ளது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இரவு 10.42 மணியளவில் இக்கப்பல் புறப்பட்டது.
இக்கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்களில் 20 பேர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1 பேர் பங்களாதேஷைச் சேர்ந்தவர் ஆவர்.
கப்பல் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் சென்றபோது, திடீரெனக் கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து மறைந்ததுடன், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த இந்திய கடலோர காவல்படையினர் (ICG) மற்றும் இந்திய கடற்படையினர் உடனடியாகத் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் இறங்கினர்.
அருகில் சென்ற எம்டி ஐசோபோஸ் (MT Aisopos) என்ற வணிகக் கப்பல் மூலம் நடத்தப்பட்ட தேடுதலில், இரண்டு லைஃப் ராஃப்ட்களிலிருந்து இரண்டு பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 22 பேரைக் கண்டுபிடிக்கும் பணியில் ‘வரத்’, ‘அன்மோல்’ மற்றும் ‘விஜித்’ ஆகிய கடலோர காவல்படை கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.



