வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் குடிநீர், கழிவு நீர் கால்வாய் வசதிகள் குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். குடிநீருக்காக தாங்கள் மிக நீண்ட தூரம் செல்வதாகவும் வேதனை தெரிவித்தனர். மழைக்காலம் வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும் கோரிக்கை எழுந்தது. அப்போது அவர்களுடயை கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி, இன்னும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். ஆனால் அமைச்சரின் உறுதிமொழியை ஏற்காத பொதுமக்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அதுவரை செய்யாத நீங்கள் இந்த 10 நாட்களிலா செய்யப்போகிறீர்கள்? என வாக்குவாதம் செய்தனர்.

அவர்களை சமாதானப்படுத்த அமைச்சர் பொன்முடியும் அவருடன் இருந்தவர்களும் முயற்சித்தனர். ஆனால், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தனர். இந்நிலையில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரேவதிதான் ஆட்களை உள்ளே இறக்கி பிரச்சனையை பெரிதாக்குகிறார் என புகார் கூறிய அமைச்சர் பொன்முடி அங்கிருந்து திடீரென வெளியேறினார். கிராம சபை கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலேயே வெளியேறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.