நீரிழிவு நோய் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு வாழ்க்கை முறை நோயாகிவிட்டது. ஒருமுறை ஏற்பட்டால் அதை முற்றிலுமாக நீக்க முடியாது. ஆனால், அதை கட்டுப்படுத்துவது நம் கைகளில் தான் இருக்கிறது. அதற்கான முக்கியமான ஆயுதம் நடைப்பயிற்சி.
சிறிது நேரம் கூட நம் கால்களை இயக்கினால் உடலின் இரத்த ஓட்டம் சீராகும்; தசைகள் குளுக்கோஸைப் பயன்படுத்தும்; இன்சுலின் இயல்பாகவே வேலை செய்ய ஆரம்பிக்கும். இதனால் மருந்தின் மீதான முழுமையான சார்பும் குறையும். ஹைதராபாத்தைச் சேர்ந்த யசோதா மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கே. சேஷி கிரண், “நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை, மாலை தலா 30 நிமிடங்கள் நடப்பது போதும். அதாவது வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம்,” என்கிறார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை நடக்க வேண்டும். சாப்பிட்ட உடனே அல்ல, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நடப்பது சிறந்தது. தொடக்கநிலையில் இருப்பவர்கள் தினமும் 10 முதல் 15 நிமிடங்களாக ஆரம்பித்து, படிப்படியாக 30 நிமிடங்களுக்கு உயர்த்தலாம் என்றார்.
தினசரி நடைபயிற்சி அளிக்கும் நன்மைகள் பல:
- இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
- இன்சுலின் உணர்திறன் மேம்படுகிறது.
- எடை மேலாண்மை எளிதாகிறது.
- இதய ஆரோக்கியம் சீராகிறது.
- தூக்கத்தின் தரம் உயர்கிறது.
- செரிமான அமைப்பு சீராகிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் 30 நிமிடங்களை ஒதுக்குவது கடினம் அல்ல. ஆனால் அந்த 30 நிமிடங்கள் நம் உடலுக்கு அளிக்கும் நன்மைகள் அளவற்றது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்துகளை மட்டும் நம்பாமல், தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது உண்மையான ஆரோக்கியப் பாதை என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருந்தால், ஒரு நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.



