இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்தாண்டு சிம்புவின் பத்து தல, இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியாகின. மேலும் அயலான், மாமன்னன், ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. சமீப காலமாக ஏ.ஆர்.ரஹ்மான் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், சீனாவில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களின் கவனிப்புத் திறனை மேம்படுத்த ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸை ஒன்றை பயன்படுத்துகின்றனர். அதாவது மாணவர்கள் தலையில் ஹெட்போன் போன்ற கருவி ஒன்று மாட்டப்படுகிறது. இந்தக் கருவி மாணவர்களின் தலையில் மாட்டிவிட்டால் ஆசிரியர் நடத்தும் பாடங்களை மாணவர்கள் கவனிக்கிறார்களா? அல்லது வேறு சிந்தனையில் இருக்கிறார்களா? என்பதை இந்தக் கருவி கண்டுபிடித்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் அனுப்புமாம்.
இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ”இந்த கால தலைமுறையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இவர்கள் ஒரே நேரத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். காலம்தான் பதில் சொல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.