மத்திய அரசு அதிகாரி என பொய் சொல்லி திருமணம் செய்துவிட்டு, மனைவியுடன் இருந்த படுக்கை அறை காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடச்சூரைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் ஜெயபால் (30). இவருக்கு அபிதா (23) என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஜெயபால் மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். ஜெயபால் சொன்னதை நம்பி அபிதாவை திருமணம் செய்து கொடுத்ததோடு, ஜெயபாலுக்கு ரூ.1 லட்சம் பணமும், 20 சவரன் நகையையும் வரதட்சணையாக அபிதாவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த அபிதா ஈரோட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், ஒரு நாள் அபிதாவுக்கு தனது கணவர் மத்திய அரசு வேலையில் இல்லாதது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அபிதா கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இது பற்றி ஜெயபாலன் சொல்ல மறுத்ததுடன், நாம் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கை அறை காட்சிகளை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும், இந்த வீடியோவை இரண்டு பேர் பார்த்துள்ளதாக ஜெயபால் தெரிவித்துள்ளார். வேலை தொடர்பாக என்னிடம் வேறு ஏதாவது கேட்டால், இந்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மனைவி அபிதாவை, ஜெயபால் மிரட்டி வந்துள்ளார். இதற்கிடையே, ஜெயபாலின் தாயார் ஜெயா (52), தந்தை செல்லப்பாண்டி (55), அக்கா கிறிஸ்டி ஞானசெல்வி (35), தங்கை கிரேட்டர் எஸ்தர் ஆகிய 4 பேரும் அபிதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த வீடியோ பற்றி ஜெயபாலின் தாய் மற்றும் உறவினர்களிடம் அபிதா கூறியதாக தெரிகிறது. இதனை ஜெயபாலின் குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளததால் அபிதா கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், அபிதா ஈரோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஈரோடு மகளிர் போலீசார், ஜெயபாலை கைது செய்துள்ளனர். மேலும் வரதட்சணை கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படும் ஜெயபாலின் குடும்பத்தினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளுக்குள் மனைவியை மிரட்டிய கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.