2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அரசியல் சூழலை தலைகீழாக மாற்றியுள்ளன. இந்த தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆளுங்கட்சியான திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.
என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
Read more: விஜய்க்கு முதலமைச்சர் சிம்மாசனம்.. ஆதரவு தெரிவிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..? பரபர ட்விஸ்ட்!



