காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிளஸ் 1 படித்து வருகிறார். இதே பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன்பு மணிரத்னம் என்பவர், இந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அடிதடி பிரச்சனையில் மணிரத்னம் சிறைக்கு சென்றார். இவர் மீது 3 வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த மணிரத்னம், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களுடன் வந்த மணிரத்னம், காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவத்தில் வீட்டின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து மாணவியின் தந்தை, தெப்பக்குளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிரத்னம் மற்றும் அவனது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மாணவியின் வீட்டின் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.