தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார். இதுவரை 5 முறை ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்.
அந்த பயணத்தில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது, எத்தனை தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன..? ஒன்றும் கிடையாது. ஆனால், திமுக அரசு, 932 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், 10 லட்சம் கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும், 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பொய் செய்தி வெளியிட்டுள்ளனர். அது உண்மையா? என நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
அதிமுக ஆட்சியில் பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்தன. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015-ல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2.48 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தார். 2019-ல் அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு ஈர்த்தோம். திமுக ஆட்சியின் நடவடிக்கை வெறும் ஏட்டளவில் தான் உள்ளது.
உங்கள் மீது ஆம்புலன்ஸ் மோதிவிட்டால் யார் பொறுப்பு. நான் பேச்சை தொடங்கிய 10, 20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்து, மக்கள் கவனத்தை திசை திருப்பி இடையூறு செய்கின்றனர். இக்கூட்டத்தை இடையூறு செய்வதற்காக திமுக செய்யும் தந்திரம் இது. தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.
கெடுதல் செய்து அதிமுகவை பணிய வைக்க ஒருபோதும் முடியாது. திமுக தற்போது ஐசியூ-வில் உள்ளது. இன்னும் 7 மாதத்தில் திமுக அதிகாரத்தை மக்கள் பறிக்கப் போகின்றனர்.அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர். திமுக ஆட்சியில் தமிழகம் தினமும் போராட்ட களமாகி விட்டது. எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது என்றார்.