ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாடுகளும், ஆன்மீக விசேஷங்களும் நிறைந்து காணப்படும் ஒரு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பாக, ஆடிச் செவ்வாயன்று பெண்களால் மட்டுமே பிரத்யேகமாகக் கடைப்பிடிக்கப்படும் “ஔவையார் விரதம்” மிகவும் பிரசித்தி பெற்றது. தெய்வப்புலவர் அவ்வையாரையும், விநாயகப் பெருமானையும் போற்றும் வகையில் பின்பற்றப்படும் இந்த வழிபாட்டு முறை, ‘பாட்டி வழிபாடு’ என்றும் ‘செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் மட்டுமின்றி, தை மற்றும் மாசி மாத செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த விரதத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் ரகசியத் தன்மையும், பெண்களுக்கான பிரத்யேக வழிபாட்டு முறையும்தான். வீட்டின் ஆண்கள் அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை இந்த பூஜை நடைபெறுகிறது. வட்டாரப் பெண்களும், இளம் பெண்களும் ஒரு வீட்டில் ஒன்று கூடி, குடும்பத்தின் மூத்த சுமங்கலிப் பெண்ணின் வழிகாட்டுதலின்படி வழிபாடுகளைத் தொடங்குவார்கள். பூஜையின் பிரதான நைவேத்தியமாகப் பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படம் ‘ஔவையார் கொழுக்கட்டை’ படைக்கப்படுகிறது. இவற்றுடன் தயார் செய்யப்படும் பிற நைவேத்தியங்களிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இந்த விரத நடைமுறைகளில் பல ஆச்சரியமூட்டும் நம்பிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டின் போது படைக்கப்படும் பிரசாதங்கள் எதுவும் ஆண்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், பச்சரிசியை உரலில் இடிக்கும் சத்தம்கூட ஆண்களின் காதில் விழக்கூடாது என்றும், இந்த பூஜையை ஆண்கள் பார்த்தால் பார்வைக் குறைபாடு ஏற்படும் என்பதும் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.
திருமணமான பெண்களுக்கு நீடித்த மாங்கல்ய பாக்கியத்தையும், கணவரின் ஆயுள் விருத்தியையும் வழங்கும் இந்த விரதம், திருமணமாகாத கன்னிகைகளுக்குச் சீக்கிரமே நல்ல வரன் அமைய துணைபுரிகிறது. அதேபோல், புதுமணத் தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் பாரம்பரிய ஆன்மீக நம்பிக்கையை இன்றளவும் பறைசாற்றும் ஒரு அற்புத வாழ்வியல் நெறியாக இந்த ஔவையார் விரதம் திகழ்கிறது.
Read More : யூடியூபர் இர்பானுக்கு மீண்டும் ஆப்பு..!! பழைய கேஸை தோண்டி எடுத்து அதிரடி உத்தரவு..!!



