ஆசியக் கோப்பை 2026 மகளிர் டி20 தொடரில் பாகிஸ்தானை 55 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியே காணாமல் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆரம்பத்திலேயே ரன்களைக் குவித்து, பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவைத் தடுக்கலாம் என்பதே அவரது திட்டமாக இருந்தது. ஆனால், அந்த அணியின் ஒன்பது பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி மற்றும் ஷவால் ஜுல்பிகார் ஆகியோர் முதல் நான்கு ஓவர்களில் ரன்களைச் சேர்த்தாலும், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது; பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
நல்ல ஃபார்மில் இருந்த முனீபா 13 ரன்களில் ஆட்டமிழந்தபோது, ஆல்-ரவுண்டர் ஷஃபாலி வர்மா முதல் அடியை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே ஸ்ரீ சரணி, குல் ஃபெரோசா மற்றும் ஷவால் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், பாகிஸ்தான் அணி சற்று நிதானமாக ஆடியிருக்க வேண்டும்; ஆனால், பவுண்டரிகளை அடிக்க முயன்று எளிதாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இந்திய வீராங்கனைகள் சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, மகளிர் டி20 போட்டிகளில் தனது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது.
56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷஃபாலி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத் தொடங்கினார். இந்திய அணிக்கு இது எளிதான வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா கடும் சவாலாகத் திகழ்ந்தார். பவர்-பிளே ஓவர்களில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவைச் சற்று தடுமாறச் செய்தார். இருப்பினும், தீப்தி மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் நிதானமாக ரன்களைச் சேர்த்து, 64 பந்துகள் மீதமிருக்கையிலேயே வெற்றியை உறுதி செய்தனர். 64 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது.
ஷஃபாலி வர்மா புதிய சாதனைகள்: இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளார். மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மிக குறைந்த பந்துகளில் (2,182 பந்துகள்) 3,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்தார். டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த மிக இளைய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனாவிற்கு அடுத்து டி20 போட்டிகளில் 3,000 ரன்களைக் கடக்கும் 3-வது இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா ஆவார்.



