வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.
பயணிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கலாச்சார ரீதியாகப் பொருத்தமான சுவைமிக்க உள்ளூர் உணவுகளை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தின் சுவையை நேரடியாகப் பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் ரயில் இருக்கைகளில் அந்தந்த பகுதிகளின் சுவைமிக்க உணவுகளை அருந்தி சுகமான அனுபவத்தைப் பெறுவர்.
நாக்பூர்–செகந்திராபாத் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மகாராஷ்டிராவின் காந்தா போஹா, தென்னிந்தியாவின் கோவைக்காய் காரப்பொடி வறுவல், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திர கோழிக்குழம்பு ஆகியவற்றைச் சுவைக்கலாம். கேரளாவின் பாரம்பரிய உணவுத் தொகுப்பில், வெள்ளை சாதம், பச்சப்பயறு பெரட்டி, கடலைக் கறி, கேரளா பரோட்டா, தயிர் மற்றும் பாலடை பாயசம் ஆகியவற்றுடன் அப்பமும், காசர்கோடு–திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் மங்களூர்–திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்களில் கிடைக்கிறது.
அதே சமயம், மேற்கு வங்கத்தின் கோஷா பனீர், ஆலு படோல் பஜா, பீகாரின் சிறப்பு உணவுகளான சம்பாரண் பனீர், சம்பாரண் சிக்கன் ஆகியவையும் அந்தந்த பகுதி வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் மசாலா உப்புமா, மேற்கு வங்கத்தின் முர்கிர் ஜோல் ஆகியவை அந்தந்த பகுதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படுகின்றன.ஜம்மு காஷ்மீர் வந்தேபாரத் ரயில்களில், அம்பல் கடு மற்றும் ஜம்மு சன்னா மசாலா உள்ளிட்ட டோக்ரி உணவு வகைகள், தக்காளி சமன் மற்றும் கேசர் ஃபிரினி போன்ற காஷ்மீர் சிறப்பு உணவுகள் பரிமாறப்படுகின்றன.
இந்த முயற்சியின் மூலம், இந்திய ரயில்வே இந்தியாவின் செழுமையான சமையல் பன்முகத்தன்மையைக் கொண்டாடி, ரயில் பயணங்களை மேலும் மறக்க முடியாததாகவும், கலாச்சாரத்தில் ஆழமாக மூழ்கவைப்பதாகவும் மாற்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



