அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று மீண்டும் 10 காசுகள் சரிந்து ரூ.87.57 ஆக உள்ளது.
அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு சரிவு பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.
பெரும்பாலான நாடுகளின் கரன்சியின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு இணையாக, அதற்கு இருக்கும் மதிப்பை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு அமெரிக்க டாலரை எவ்வளவு ரூபாயை வைத்து வாங்க முடிகிறதோ அதுதான் ரூபாயின் மதிப்பை மதிப்பிடும் அளவுகோலாக இருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் டாலரை வைத்துதான் மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், இந்திய ரூபாயின் மதிப்பு நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேச நிலவரங்களை பொறுத்து ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.
டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த காலத்தில், சீனா மற்றும் மெக்சிகோ மீது அதிக வரிகளை விதித்தார். சமீபத்தில் இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி வெளியிட்டது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று மீண்டும் 10 காசுகள் சரிந்து ரூ.87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.