நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், சீனிவாஸ் லூயிஸ் (47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் ஆவார்.
சீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டம் பெற்றவர் என்றும், பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது வேலையில்லாமல் இருக்கும் இவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வருகிறார். லூயிஸ் இந்தியா முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் செய்திகளை அனுப்பியுள்ளார்.
தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டமன்றம் மற்றும் பல்வேறு கல்வி மற்றும் அரசு நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அண்மையில் அதிகரித்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறை குழுக்களின் கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த லூயிஸ் சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக, குற்றம் சாட்டப்பட்ட நபர் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், ஏராளமான மின்னஞ்சல்களை அனுப்பியும், முக்கிய நிறுவனங்களை வெடிவைத்துத் தகர்க்கப்போவதாகத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது; அந்த விசாரணையின் இறுதியில், இந்த மிரட்டல்களின் பின்னணியில் கர்நாடகத்தைச் சேர்ந்த சீனிவாஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
“முதற்கட்ட விசாரணையின்படி, அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆரம்பகட்ட விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வாயிலாக 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒப்புக்கொண்டார்,” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார்.
பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு
காவல்துறையினர் தற்போது அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்கின்றனர்; அங்கு அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, நாட்டின் பிற இடங்களிலும் இதேபோன்ற மிரட்டல்களை விடுத்துள்ளாரா என்பதை அறியும் வகையில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த மிரட்டல்கள் தொடர்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
Read More : குவைத்தில் இந்திய தொழிலாளி பலி.. மின் நிலையம் மீது ஈரான் தாக்குதல்.. வளைகுடாவில் தொடரும் பதற்றம்..!



