இன்ஸ்டாகிராமில் ஐபோன் வாங்க முயற்சிக்கும் போது ரூ.29 லட்சத்தை ஒருவர் இழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி மாநிலம் கிடோர்னி பகுதியில் விகாஸ் கட்டியார் என்ற நபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃஐபோன்களுக்கு அதிக தள்ளுபடியைப் பார்த்துள்ளார். அந்த பக்கத்தை சரி பார்த்த பின்பு, முன்னதாக அந்த கணக்கிலிருந்து மொபைல் போன்களை வாங்கியவர்களிடம் விசாரித்து அது உண்மையானது தானா என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். பின்னர் ஐபோன் வாங்குவதற்காக ஒரு மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் முன்பணமாக ரூ.28,000 தருமாறு கேட்டுள்ளார். மேலும் சுங்கம் மற்றும் இதர வரிகளை வசூலிப்பதாக கூறி விகாஸிடம் இருந்து மொத்தம் ரூ.28,69,850 (சுமார் ரூ.29 லட்சம்) பெற்றுள்ளனர். இது தொடர்பாக விகாஸ் காவல் துறையில் புகாரளித்த நிலையில், மாவட்ட சைபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பாதுகாப்பாக இருக்க நீங்கள் வாங்கும் இணையதளம் உண்மையானதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நேரடியாக எதையும் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அதன் பிறகு நீங்கள் எந்த வகையான ஆன்லைன் பேமெண்ட்டுகளையும் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சந்தேகமாக இருக்கும் பக்கத்தின் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், கேஷ் ஆன் டெலிவரி மூலம் ஆர்டர் செய்யவும். இதன் மூலம் பொருள் உங்களிடம் வந்து சேர்ந்தவுடன் நீங்கள் பணம் செலுத்தி கொள்ளலாம்.