இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு கண்டம் பாய்ம் ஏவுகணைகள் மூலம், குறிவைத்தும் திடீரெனவும் நடத்திய தாக்குதல்களில், குற்றவாளியான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகமும், அந்த ஆட்சியின் விமானப்படை தளபதியின் இருப்பிடமும் தாக்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேல் அரசோ அல்லது இஸ்ரேல் ஊடகங்களோ, ஈரான் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கையை இதுவரை உறுதிப்படுத்தவில்லை; எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம்
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி என்பவரின் மரணத்துக்குப் பிறகு, மத்திய கிழக்கு பகுதி மிகுந்த பதற்ற நிலையில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கமெனி உயிரிழந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த பதிலடி நடவடிக்கைகளில், பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் தொடர்புடைய இராணுவ தளங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று பெயிட் ஷெமெஷ் நகரில் ஈரான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரம் ஜெருசலேம் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
தொடரும் அச்சுறுத்தல்கள் – இருதரப்பும் கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல், ஈரான் மேலும் பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேசிய உரையாற்றலில் நெதன்யாகு கூறியதாவது:
“எங்கள் படைகள் தற்போது தெஹ்ரானின் மையப் பகுதிகளை குறிவைத்து அதிகரிக்கும் சக்தியுடன் தாக்கி வருகின்றன. வரும் நாட்களில் இந்த தாக்குதல்கள் மேலும் வலுப்பெறும்.” என்று தெரிவித்தார்..
மேலும், ஈரான் மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் அலையில், இரண்டு மூத்த ஈரான் உளவுத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் சயீத் யஹ்யா ஹமீதி மற்றும் ஜலால் பூர் ஹுசைன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹமீதி, ஈரானின் உளவுத்துறையில் இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களுக்கு துணை அமைச்சராக இருந்தார்; உலகம் முழுவதும் யூதர்களை குறிவைக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் பொறுப்பாக இருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஜலால் பூர் ஹுசைன், ஈரான் உளவுத்துறை அமைச்சகத்தில் உளவு நடவடிக்கைகளை வழிநடத்திய பிரிவின் தலைவராக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
நடன்ஸ் அணு நிலையம் குறித்த குற்றச்சாட்டுகள்
ஈரானில் உள்ள நடன்ஸ் அணு நிலையம் என்ற அணு செறிவூட்டல் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக, ஐக்கிய நாடுகள் சபையில் ஈரானின் தூதர் ரேசா நஜாஃபி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த தகவலை அவர் ஐநா சபையில் முன்வைத்தார்.
அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருகிறது என்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் நஜாஃபி தெரிவித்தார். ஆனால், ஈரான் முன்வைக்கும் இந்த விளக்கங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More : உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஈரான்..! பதறும் உலக நாடுகள்..!



