அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரான் அதிபரை ‘நிபந்தனையின்றி சரணடைய’ வலியுறுத்தி டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் இப்போது மிக எளிதான இலக்காகவும் இருக்கிறார். அதே சமயம், அவர் பாதுகாப்பாகவே இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப்போவதில்லை). பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் தாக்குவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எங்கள் பொறுமை குறைந்துகொண்டே போகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரான் கடுமையான சேதங்களை சந்தித்து வருவதாக கூறிய டிரம்ப், தெஹ்ரானில் இருக்கும் 95 லட்சம் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அமெரிக்காவும் ஈரான் மீது விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலை எதிர் கொள்ள ஈரான் ராணுவம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Read more: நீலகிரி மாவட்டத்தில் வேலை.. ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்.. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!